அன்ன தானம் 2

|



அன்ன தானம்



‘அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில் என்
பகரு ஞானி பகல் ஊண் பலத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயம் தானே’ .
அந்தணர்க்கு ஆயிரமாயிரம் (கிராமங்கள்) செய்தாலும், ஆயிரமாயிரம் கோட்டை, கோயில்கள் கட்டி முடித்தாலும், ஞானிக்கு அளிக்கப்படும் ஊண் பலம் என்று சொல்லப்படும் அன்னதான தர்மத்திற்கு ஈடாக எந்த செய்கையும் நிச்சயமாக நிகரில்லை என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார் திருமூலர்.
`பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றூள் எல்லாந் தலை ` என்பார் திருவள்ளுவர்.
நம்மிடம் உள்ள உணவை  உயிர்கள் வாழ பகிர்ந்து அளித்து உண்டு வாழ்பவன் எல்லா உயிரினும் மேலானவராக கருதப்படுகிறார். மனிதருக்கு மட்டுமல்ல-எந்த ஒரு ஜீவராசிக்கும் உணவளிப்பதும் அன்னதானமாகும். ஒரு பிடி சர்க்கரையை எறும்புப் புற்றில் போடுவதும், காக்கைக்கு சோறிடுவதும், பசுவிற்கு தழையைக் கொடுப்பதும் அன்னதானம் தான். இதைத்தான் அன்றே திருமூலர்
~யாவர்க்குமாம் இறைவற் கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.~..........என்றார்.
தானம் மூன்று வகையாக சொல்லப்படுகிறது. தலைப்படு தானம், இடைப்படு தானம், கடைப்படு தானம்.தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் கொடுக்கப்படும் தானம்(தர்மம்) நாற்பத்திரண்டு வகைப்படுத்தப்படுகிறது. அதில் மிக மிக உயர்ந்ததாகவும், உன்னதமாகவும் அனைவரும் செய்தே ஆக வேண்டியதாகவும் கருதப்படுவது அன்னதானமே. இதில் மனிதர்க்கு அரிசிசோறு உணவிடுவது என்பது.சாலச் சிறந்தது. ஏனெனில் அரிசி யில் –அரி என்பது அரியையும்(பெருமாளையும்), சி என்பது சிவனையும் குறிப்பதாகும். அன்னதானத்தில் வழங்கப்படும் அன்னம் (சாதம்) தோஷமற்றது. இந்த அன்னம் ஐந்து தெய்வ அம்சம் கொண்டது. 1) நெல்- தானியம்- தான்யசக்தி. 2) நீர் கொண்டு சமைப்பதால்-நீர் சக்தி. 3) நெருப்பால் சமைப்பதால்- தீ சக்தி. 4) அமிர்த சக்தி. 5) சோறு வேகும் வாசனை ஆகாச சக்தி. ஆக ஐந்து சக்திகளை கொண்டு –ந-ம-சி-வா- என்னும் ஐந்தெழுத்து மந்திரங்களால் ஆனது. உலகின் முதலில் தோன்றிய தாவரமே நெல். தருமம் செய்வதற்கு ஏற்ற இடம் இந்த மண்ணுலகம் ஆகும். அன்னம் அளிக்கும் இடம் பசித்தவர் அங்கமாகிய வயிறு என்பதை உணர்தல் வேண்டும்.` வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்` என்றார் வள்ளல் பெருமான். பயிர் வாடுவது பசுமை (நீர்) இன்மையால். உணவு இன்மையினால். அந்த வாட்டத்தை மனிதரிடம் காண பொறுக்காதவராய்த்தான் பசியால் படும் துன்பத்தை போக்க உறுதி பூண்டு தர்ம சாலை நிறுவி  அனைவர்க்கும் உணவளித்து உலக உயிர்களின்   பசியை போக்குகிறார். 63 நாயன்மார்களில் 30 நாயன்மார்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம் மக்களுக்குச் சோறிடும் தொண்டையே வலியுறுத்தியிருக்கிறார்கள். அத்துடன் மட்டுமல்லாமல் மூர்க்க நாயனார் சூதாடி வென்ற பொருளால் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்த சிறப்பையும் அதிபத்த நாயனார் நாள்தோறும் தம் வலையில் அகப்படும் முதல் மீனினை இறைவனுக்கு படைத்த பாங்கினையும் நாம் அறிவோம். மண்ணில் மனிதராகப் பிறந்த ஓவ்வொருவரும் அடியார் தமக்கு அன்னமிடுதலாகிய அமுது படைத்தல் வேண்டும் என்று திருஞானசம்பந்த பெருமான் கூறுவார்`.
~மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் மதிசூடும்

அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல்

காண்ணினால் அவர் நல்விழாப் பொலிவுகண்டார்தல்
உண்மையாமெனில் உலகர்முன் வருகென உரைப்பார்.~
ஒருவருக்கு கொடுத்துவிட்டு நாம் உண்ண வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் பதிய வேண்டும். அப்பொழுதுதான் நம்மிடையே மனிதநேயம் வளரும். நாடும் நலம் பெரும். அன்னதானம் செய்வது பற்றி கூறுகையில் `-
1)  ஓதுவர்க்கு உணவு- கல்வி பயிலுகின்றவர்களுக்கு உணவளித்து அவர்களை பராமரித்தல்.
2)  அறுசமையத்தார்க்கு உண்டி – சமயங்களில் ஆறு வகை உண்டு (சைவம், வைஷ்ணவம்,சமணம், கெவ்மாரம், புத்தம், சாக்தம்) இந்த ஆறுவகைச் சமயத்தாருக்கும் சமய வேறுபாடு இன்றி உணவளித்தல்.
3)  பசுவுக்கு வாயுறை – பசுக்களுக்குத் தீனி அளித்து பராமரித்தல்.
4)  சிறைச்சோறு – கைதிகள் பட்டினியில்லாமல் இருக்க உணவளித்தல்.
5)  ஐயம் – யாசித்து (பிச்சையெடுத்து) வருகிறவர்களுக்கு உணவளித்தல்.
6)  திண்பாண்டம் நல்கல் – வழிபோக்கர்களுக்கு உணவு, குடிநீர் முதலியன கொடுத்து உபசரித்தல்.


7)  அறவைச்சோறு – அநாதைகளுக்கு உணவளித்தல்.


அனைத்தையும் துறந்த பட்டிணத்தடிகள் பசியை மட்டும் துறக்கமுடியவில்லை. அப்பர் பெருமானுக்கு இறைவனே கட்டுச்சோறு சுமந்து வந்து உணவு தருகிறான். சுந்தரருக்கோ இறைவன் பிச்சையெடுத்து வந்து உணவளிக்கிறான். இராமலிங்க அடிகளாருக்கோ வடிவுடையம்மனே அண்ணி உருவத்தில் வந்து உணவளித்து பசியாற்றுகிறாள். பசி என்பது ஒரு பருவத்தில் தோன்றி ஒரு பருவத்தில் மறைந்து விடுவதில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை பசி என்பது இருந்து கொண்டிருக்கும். யார் ஒருவர் மற்றவர் பசியை போக்குகின்றார்களோ அவர்களே உலகத்தில் உயர்ந்தவர்கள்.பசியடைந்தோர்களுக்கு உணவளிப்பதே சிறந்த தானம். இறைவனை அடையும் வழி. முக்தியைப் பெறுவதற்கு முதல் படி என்பதை உணர வேண்டும். ஆகவே பசிப்பிணி நீக்குவது சிறந்த சிவப்பணியாகும்.~வயிற்றுக்கு சோறுண்டு கண்டீர் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்` என்றும் ~ தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்~ – என்றும் மகாகவி பாரதி உரக்கச் சொல்லியுள்ளார். ஆகவே, உணவிடுங்கள்- பசித்தவர்களுக்கு உணவிடுங்கள்- அன்னதானம் செய்யுங்கள்-வாழ்வில் அனைத்து நலனும் பெற்று வாழ்வாங்கு வாழ்வீர்கள்.



 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB