|

ஸ்ரீ குள்ளச்சாமியின் புகழ் பாடும் பாரதி

|


ஞான்குரு தேசிகனைப் போற்று கின்றேன்;
நாடனைத்துந் தானாவான் நலிவி லாதான்;
மோனகுரு திருவருளால் பிறப்பு மாறி
முற்றிலும்நாம் அமரநிலை சூழ்ந்து விட்டோ ம்;
தேன்னைய பராசக்தி திறத்தைக் காட்டிச்
சித்தினியல் காட்டிமனத் தெளிவு தந்தான்.
வானகத்தை இவ்வுலகிலிருந்து தீண்டும்
வகையுணர்த்திக் காத்த பிரான் பதங்கள் போற்றி!

எப்போதும் குருசரணம் நினைவாய்,நெஞ்சே!
எம்பெருமான் சிதம்பரதே சிகந்தாள் எண்ணாய்!
முப்பொழுங் கடந்தபெரு வெளியைக் கண்டான்,
முத்தியெனும் வானகத்தே பரிதி யாவான்,
தப்பாத சாந்தநிலை அளித்த கோமான்,
தவம் நிறைந்த மாங்கொட்டைச் சாமித் தேவன்,
குப்பாய ஞானத்தால் மரண மென்ற
குளிர்நீக்கி யெனைக்காத்தான்,குமார தேவன்! 

தேசத்தார் இவன்பெயரைக் குள்ளச்சாமி
தேவர்பிரான் என்றுரைப்பார்;தெளிந்த ஞானி
பாசத்தை அறுத்துவிட்டான்,பயத்தைச் சுட்டான்;
பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்;
நாசத்தை அழித்துவிட்டான்;யமனைக் கொன்றான்;
ஞானகங்கை தனைமுடிமீ தேந்தி நின்றான்;
ஆசையெனும் கொடிக்கொருதாழ் மரமே போன்றான்,
ஆதியவன் சுடர்பாதம் புகழ்கின் றேனே. 

வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா;
வரிசையுடன் எழுதிவைக்க வகையும் எல்லை;
ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ?
ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ?
ஆயிரனூல் எழுதிடினும் முடிவ்ய் றாதாம்;
ஐயனவன் பெருமையைநான் சுருக்கிச் சொல்வேன்;
காயகற்பஞ் செய்துவிட்டான்;அவன்வாழ் நாளைக்
மணக்கிட்டு வயதுரைப்பார் யாரும் இல்லை. 

அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி
அடைக் கலஞ்சேர் ஈசுவரன் தர்மராஜா
என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்,
இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான்,
முன்றனது பிதா தமிழில் உபநிடதத்தை
மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
என்றனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண்
இருக்கையிலே அங்குவந்தான் குள்ளச் சாமி. 

அப்போது நான்குள்ளச் சாமி கையை
அன்புடனே பற்றியது பேச லுர்றேன்:
''அப்பனே!தேசிகனே!ஞானி என்பார்
அவனியிலே சிலர்நின்னைப் பித்தன் என்பார்;
செப்புறுநல் லஷ்டாங்க யோக சித்தி
சேர்ந்தவனென் றுனைப்புகழ்வார் சிலரென் முன்னே
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய்,
உத்தமனே!எனக்குநினை உணர்த்து வாயே. 

யாவன் நீ? நினைக்குள்ள திறமை என்னே?
யாதுணர்வாய் கந்தைசுற்றித் திரிவ தென்னே?
தேவனைப்போல் விழிப்ப தென்னே? சிறியாரோடும்
தெருவிலே நாய்களொடும் விளையாட் டென்னே?
பாவனையிற் பித்தரைப்போல் அலைவ தென்னே?
பரமசிவன் போலுருவம் படைத்த தென்னே?
ஆவலற்று நின்றதென்னே? அறிந்த தெல்லாம்,
ஆரியனே,அனக்குணர்த்த வேண்டும்''என்றேன். 

பற்றியகை திருகியந்தக் குள்ளச் சாமி
பரிந்தோடப் பார்த் தான்;யான் விடவே யில்லை,
சுற்றுமுற்றும் பார்த்துப்பின் முறுவல் பூத்தான்;
தூயதிருக் கமலபதத் துணையைப் பார்த்தேன்;
குற்றமற்ற தேசிகனும் திமிறிக் கொண்டு
குதித்தோடி அவ்வீட்டுக் கொல்லை சேர்ந்தான்;
மற்றவன்பின் யானோடி விரைந்து சென்று
வாவனைக் கொல்லையிலே மறித்துக் கொண்டேன்.

பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே;பரம யோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி,
''அறிதிகொலோ!''எனக்கேட்டான்''அறிந்தேன்''என்றேன்.
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்;யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன். 

தேசிகன் கை காட்டியெனக் குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்;
''வாசியைநீ கும்பகத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர்போலே,வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றி நுள்
தெரிவதுபோல் உனக்குள் சிவனைக் காண்பாய்;
பேசுவதில் பயனில்லை.அனுப வத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்''என்றான். 

கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன்,
கருத்தையதில் காட்டுவேன்;வானைக் காட்டி
மையிலகு விழியாளின் காத லொன்றே
வையகத்தில் வாழுநெறி யென்றுகாட்டி,
ஐயனெனக் குணார்த்தியன பலவாம் ஞானம்,
அகற்கவன்காட் டியகுறிப்போ அநந்த மாகும்.
பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன்
பூமிவிநா யகன்குள்ளச் சாமி யங்கே. 

மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
கருணைமுனி சுமந்துகொண்டென் னெதிரே வந்தான்;
சற்றுநகை புரிந்தவன்பால் கேட்க லானேன்;
''தம்பிரா னே; இந்தத் தகைமை என்னே?
முற்றுமிது பித்தருடைச் செய்கை யன்றொ?
மூட்டைசுமந் திடுவதென்னே?மொழிவாய்''அன்றென்.

புன்னகைபூத் தாரினும் புகலுகின்றான்;
''புறததேநான் சுமக்கின்றேன்;அகத்தி னுள்ளே;
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ"
என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்.
மன்னவன்சொற் பொருளினையான் கண்டு கொண்டேன்;
மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்ப தாலே
இன்னலுற்று மாந்தரெல்லாம் மடிவார் வீணே,
இருதயத்தில் விடுதலையை இசைத்தால் வேண்டும். 

சென்றதினி மீளாது;மூடரே,நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்;சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புடிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளாஇ யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும். 

மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா,அந்தோ!
மேதையில்லா மானுடரே!மேலும் மேலும்
மேன்மேலும் புதியகாற் றெம்முள்வந்து
மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்.
ஆன்மாவென் றெகருமத் தொடர்பை யெண்ணி
அறிவுமயக் கங்கொண்டு கெடுகின்றீரே!
மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும். 

சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;
'ஸ்ரீதரன்யான் சிவகுமா ரன்யா னன்றோ?
நன்றிந்தக் கணம்புதிதாய்ப் பிறந்து விட்டேன்;
நான் புதியவன்,நான் கடவுள்,நலிவி லாதோன்'
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்;பரம தர்மக்
குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து
குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார். 

குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும்
குவலயத்தில் வினைக்கடிமைப் படாதா ராகி
வெறியுடையோன் உமயாளை இடத்தி லேற்றான்
வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச்
செறியுடைய பழவினையாம் இருளைச் செற்றுத்
தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர்,
அறிவுடைய சீடா,நீ குறிப்பை நீக்கி
அநந்தமாம் தொழில் செய்தால் அமர னாவாய். 

கேளப்பா!மேற்சொன்ன உண்மை யெல்லாம்
கேடற்ற மதியுடையான் குள்ளச் சாமி
நாளும்பல் காட்டாலும் குறிப்பி னாலும்
நலமுடைய மொழியாலும் விளக்கித் தந்தான்;
தோளைப் பார்த் துக்களித்தல் போலே யன்னான்
துணையடிகள் பார்த்துமனம் களிப்பேன் யானே;
வாளைப்பார்த் தின்பமுறு மன்னர் போற்றும்
மலர்த்தாளான் மாங்கொட்டைச் சாமி வாழ்க! 


தமிழகத்தில் உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள்-சென்னை

|

தமிழகத்தில் உள்ள சித்தர்களின்

ஜீவசமாதிகள்-சென்னை


தமிழகத்தில் உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள்-சென்னை

|

தமிழகத்தில் உள்ள சித்தர்களின்

ஜீவசமாதிகள்-சென்னை

தமிழகத்தில் உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள்-சென்னை

|

தமிழகத்தில் உள்ள சித்தர்களின்

ஜீவசமாதிகள்-சென்னை

|

தமிழகத்தில் உள்ள சித்தர்களின்

ஜீவசமாதிகள்-சென்னை

தமிழகத்தில் உள்ள சித்தர் ஜீவசமாதிகள்-சென்னை

|

தமிழகத்தில் உள்ள சித்தர்களின்

ஜீவசமாதிகள்-சென்னை

 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB