சற்குருஸ்ரீ அப்பாபைத்தியம் சுவாமிகள்-பகுதி 2

|

சற்குரு ஸ்ரீஅப்பா பைத்தியம் சுவாமிகள்


சற்குரு ஸ்ரீ அப்பா சுவாமிகள் மலையிலிருந்து இறங்கி வெகுதூரம்
நடந்து சென்று ஒரு விநாயகர் கோயிலில் வந்து அமர்ந்து கொண்டு 
அழுதார். அப்போது ஆடையில்லாமல், பிச்சைக்காரர்
போன்று அழுக்கான தோற்றமளித்த ஒருவர் வந்து நீ யார் ?
ஏன் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாய் ?
உன் தாய்-தந்தையர் எங்கே ? என்று வினவினார்.
அவர் தான் தவத்திரு ஸ்ரீ அழுக்கு  சுவாமிகள். 

எனக்கு ஊரும் இல்லை, பேரும் இல்லை- தாயும் இல்லை,
தந்தையும் இல்லை என்று பயந்து கொண்டே கூறினார்
சுவாமிகள். நெஞ்சை தடவி கொடுத்து பயப்படாதே எங்கே 
போகிறாய் ? என்று கேட்டார் அதற்கு சுவாமிகள் எனது தாய் தந்தை
இருக்கும் இடத்தை நோக்கி போகிறேன் என்றார்.
.உனது தாய் தந்தை இருக்கும் இடத்திற்கு,  நான் அழைத்து
செல்கிறேன் என்னுடன் வா என்று சொல்லி சுவாமிகளை
மூன்று நாட்கள் காடு,மலை எனறு எங்கெல்லாமோ 
அழைத்துச் சென்றார்.

கடைசியில் ஒரு குகைக்கு வந்தடைந்து -அதனுள்ளிருந்து
ஒரு ஏட்டுச் சுவடியை கொண்டு வந்து கொடுத்து சுவாமிகளை
படிக்கச் சொன்னார்.சுவாமிகள் தனக்கு படிக்கத் தெரியாது என்று
சொல்லவே அழுக்கு சுவாமிகள் எப்படி படிக்கவேண்டும் என்று
இரண்டு நாள் சொல்லிக் கொடுத்தார். மூன்றாம் நாள் சுவாமிகள்
கோபம் கொண்டு இதுவெல்லாம் எனக்குத் தேவையில்லை
-எனக்கு என் பெற்றோர் தான் வேண்டும் என்று பிடிவாதம்
பிடித்து உண்ணாமல்-உறங்காமல் ஆடையின்றி பாறை மேலேறி
படுத்துக் கொண்டார். 

அழுக்கு சுவாமிகள் என்ன உணவு கொண்டு வந்து கொடுத்தாலும்
சுவாமிகள் சாப்பிடாமல் இருந்தார்.. ஆனாலும் அழுக்கு சாமிகள்
குழந்தையின் பசிக்கு ஆகாரம் கொண்டு வந்து தருவதை
நிறுத்தவில்லை.குழந்தை அவரை அடித்தது-கடுஞ்சொல் பேசியது .
எதையும் அவர் பொருட்படுத்தவில்லை..” நீ ஆண்டவன் குழந்தை
-உன் முன்னோர்கள் செய்த புண்ணியத்தால் நீ நாட்டுக்கு நல்லது
செய்ய வந்து பிறந்துள்ளாய்”என்று சொல்லி அவருக்கு
உணவும் தந்து உடையும் உடுத்தி விட்டார்.
அவரை வணங்கிய மக்களை “குழந்தை தான் தெய்வம்-
அதை வணங்குங்கள் “ என்று சுவாமிகளின் பிறப்பின் இரகசியத்தை
அறிவித்து சில நாட்களில் சமாதியானார்.

தனக்கு இருந்த ஒரே ஒரு ஆதரவும் மறைந்த பின் சுவாமிகள்
அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி சென்றார். காடு மலைகளை
சுற்றி திரிந்தார்.

பின் பழனி,திருச்சி,விராலி மலை என்று பல இடங்களுக்கும்
சென்று மக்களுக்கு ஆசி வழங்கினார்.
சில காலத்திற்கு பிறகு பழனியில் புளிய மரத்தின் அடியில் 
இருக்கும் பாறையின் மேல் குழந்தை படுத்து இருந்தது .
சாது மடத்தில் ஐந்தாயிரம் பேருக்கு சாப்பிட அன்னதானம் செய்து 
கொண்டு இருந்த பெரியவர் ஒருவர் குழந்தையைக் கண்டு
“ இது தன் சகோதரனின் குழந்தை” என்று உணர்ந்து
”அப்பா அப்பா” என்று கதறி அழுதார். குழந்தை கிடைக்க வேண்டி
ஊரெல்லாம் கோயில் கோயிலாக அன்னதானம் செய்து வந்த அவர்,
தம் குடும்பத்து வாரிசு-ஒருபைத்தியக்காரனைப் போல காடு
மலையெல்லாம் திரிகிறதே என்று வேதனைப்பட்டு கதறினார்.
தன்னுடன் வந்துவிடுமாறு கெஞ்சினார். குழந்தை கேட்கவில்லை.
தனக்கு உலகம் முழுதும் தாய்-தந்தையர்கள் உள்ளனர்-அதனால் 
அவர்களை தேடி தேசாந்திரம் செல்வதாக கூறிக் கிளம்பியது.

சுவாமிகள் ஊர் ஊராக சென்றார். மக்களின் குறைகளை
தீர்த்து வைத்தார். தன்னை நாடி வந்தவர்களுக்கு
இன்னருள் புரிந்தார். தன்னை மனதினில் இருத்தி 
தியானிப்பவர்களுக்கு கஷ்டங்களைப் போக்கி
நல்லாசி வழங்கினார்.
பக்தர்கள் அவரை “அப்பா அப்பா” என்று தான் கூப்பிடுவார்கள்.
ஆனால் சுவாமிகள் தன்னை ஒரு பைத்தியம் என்று தான்
சொல்லிக் கொள்வார்கள்.
அதனால் அவர் “அப்பா பைத்தியம் சுவாமிகள்” என்றே
கொள்ளப்பட்டார்.

சுவாமிகள் நிறைவாக தமது 141-ஆம் வயதில் சேலத்தில்
உள்ள சூரமங்கலம் என்ற ஊரில் “சற்குரு மாளிகை”  (தருகவிலாஸ்)
எனுமிடத்தில் பிரமாதி ஆண்டு 11.02.2000 தை அன்று 28-ம் நாள்
அசுவினி நட்சத்திரத்தில் சமாதியானார்..

சுவாமிகளின் கோவில் விஷீ ஆண்டு ஐப்பசி திங்கள் 25-ஆம் நாள்
11.01.2001 அன்று தெய்வ தமிழ் முறைப்படி திருமுழுக்கு நீராட்டு
விழா இனிதே நடைபெற்றது.

இன்றும் சுவாமிகள், பலர் கனவில் தோன்றி பல நற்செய்திகளையும்
நல்லாசிகளையும் வழங்கி பலர் வாழ்வில் மறையாத தெய்வமாக
வலம் வநது கொண்டிருக்கிறார்.

சற்குரு ஸ்ரீ அப்பா பைத்தியம் சுவாமிகள்

|

சற்குரு ஸ்ரீ அப்பா பைத்தியம் சுவாமிகள்



பாரதத்தின் பல திசைகளிலிருந்து ரிஷிகளையும்
ஞானிகளையும் தவச்செல்வர்களையும்,சித்தர்களையும்,
தெய்வ நினைப்பில் ஆனந்த களிப்பு எய்தியவர்களையும்,
யோகிகளையும் ஈர்த்த சக்தி இப்புனித பூமியாம் இப்புதுவைக்கு
 உண்டு.மேலும் இலங்கை,பிரான்ஸ்,போன்ற அயல்
நாடுகளிலிருந்தும் உயர்ந்த மனிதர்கள் புதுச்சேரியை நாடி
வந்திருக்கின்றனர்.அவர்களின் பலவித ஆத்மானு
அனுபவங்களுக்கு புதுச்சேரியே சரியான இடம் என்று முடிவு
எடுத்ததற்கு இப்புதுவையின் ஈர்ப்பு சக்தியே காரணம்.
ஞானம் விளைகின்ற காரணத்தால், ஞானிகள் தவம் புரியும் 
இடமாக இருப்பதால்-இப்புதுவையை ஞான பூமி என்றே
அழைக்கிறார்கள்.
இத்தகைய சித்தர்கள் வாழ்ந்த பூமியில், புதுவையில் சில காலம்
வாழ்ந்தவர் தான் சற்குரு ஸ்ரீ அப்பா பைத்தியம் சுவாமிகள். 

ஒரு மகானின் அவதாரம் என்பது இறைவனின் வழிகாட்டுதலுக்கும்
தீர்மானத்துக்கும் உட்பட்டே அரங்கேறுகிறது.
அப்படி இறைவனால் தீர்மானிக்கப்பட்டு பூமியில் தோன்றிய போற்றத்தக்க 
ஓர் அவதாரம்தான் தவத்திரு.அப்பா பைத்தியம் சுவாமிகள்.



சற்குரு ஸ்ரீ அப்பா பைத்திய சுவாமிகளின் இயற்பெயர் முத்து.
ஜமீன் பரம்பரையில் பிறந்தவர். செல்வச்செழிப்பில் வளர்ந்தவர்.
1859-ம் வருடம் சித்திரைத் திங்கள் 28-ம் நாள் புனர்பூச நட்சத்திரத்தில்
கரூவூர் ஜமீன் குடும்பத்து வாரிசாக அவதரித்தார்.
சுவாமிகளுக்கு ஐந்து மாதமிருக்கையில்-பாட்டனார்,
தன் பேரன் இவ்வுலகை பரிபாலனம் செய்ய வந்துள்ளான்
என்று ஜாதகம் கணித்துக் கூறினார்.
எட்டு மாத குழந்தையான சுவாமிகளை கண்டுணர்ந்த -பசிக்கு
ஒதுங்கிய பரதேசி ஒருவர் “இது தெய்வக்குழந்தை” என்று
அருள்வாக்கு சொல்லி மறைந்தார்.

சுவாமிகளின் எட்டாவது மாதத்தில் தன் தாயையும்,பதினாறாம்
வயதில் தந்தையையும் இழந்தார்.
தான் என்னதான் சித்தப்பா
சித்தி யின் அரவணைப்பில் வளர்ந்திருந்தாலும் -சொந்த
பந்தங்கள் அன்பு காட்டினாலும் தன் தந்தையை இழந்தவுடன்
தான் தனிமையாகி விட்டதாக உணர்ந்தார்.
இறைவன் மேல் கோபம் கொண்டார். பூஜை அறையில்
இருந்த படங்களை போட்டு உடைத்தார்.
கையில் கிடைத்த சில தங்க நகைகளையும், சிறிது
பணத்தையும் எடுத்துக் கொண்டு யாரிடமும் சொல்லாமல்
வீட்டை விட்டு கிளம்பி விட்டார்.எங்கு போவது என்று
தெரியவில்லை இருந்தாலும் பழனி செல்லும் வண்டியை
பிடித்து பழனி மலையை அடைந்தார்.
கையில் இருந்த பணத்தைக் கொண்டு தேங்காய் வாங்கி
முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து மகிழ்ந்தார்.
பின்னர் எங்கே போவது என்று தெரியாமல் பழனிமலை
அடிவாரத்தில் இருந்த வினாயகர் கோயில் அருகில் 
வந்து அமர்ந்து கொண்டு -அழுதார்.
அங்கு தான் அவரின் குருவான மகான் ஸ்ரீ அழுக்கு சாமியார்
அவர்களின் அனுக்கிரஹம் கிடைத்தது.




அடுத்த பதிவில் தொடரும்.......

|

புதுவையில் மற்றும் ஓர் புதிய (சித்தர்)  திருக்கோயில்


 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB